இன்று 19-04-2019 சித்திரா பௌர்ணமி - தொல்காப்பியர் நாள்
தொல்காப்பியர் நாள்
காசினி தனக்குக் கதிரவன் நடுவென
கண்டும் விண்டும் உரைத்தவர் தமிழர்
மற்றவர் மரத்தில் வாழும் போது
மாளிகை கட்டியே வாழ்ந்தவர் தமிழர்
கோளினை ஒன்பதாய்க் கூறிய தமிழர்
நாளிகை முதலாய் பருவம் ஆறென
வகுத்த தமிழரின் இலக்கியத் தோப்பில்
செழித்த மரமே முப்பால் நூலாம்
முப்பாலுக்கு முன்னோடி உயர்தொல் காப்பியமே
உலகின் முதன்நூல் ஒப்பற்ற பெருநூல்
நலமிகு தமிழர் நல்வாழ்வை நவில்வது
வண்டமிழர் வாழ்வுதனை வகையாய்ப் பிரித்து
அகமென்றும் புறமென்றும் அளந்து கூறும்நூல்
அகமெனப் படுவது அதனது இலக்கணம்
உள்ளத்திலும் இல்லத்திலும் உள்ளதை பிறர்க்கு
உரைக்க இயலா உள்ளுணர்வு உடையது
களவென்றும் கற்பென்றும் கவையாய்ப்ப பிரிந்து
கன்னித் தமிழர் காதல் வாழ்வை
முதல்கரு உரியென முறைபட உரைப்பது
ஒருவன் வாழ்வை இருகூ றாக்கி
முப்பொருள் தன்னை நால்வகை நிலத்தொடு
ஒழுக்கம் ஐந்தையும் அறுவகைப் பருவமும்
புறமெழு திணையும் மெய்ப்பா டெட்டும்
ஒன்பான் சுவையும் பத்துப் பொருத்தமும்
நற்பனுவல் ஆக்கினான் தொல்காப் பியனே
அன்னோர் திருநாள் சித்திரை முழுநிலவு
அனைவரும் கொண்டாடி அவர்புகழ் நிறுத்துவோம்
தொல்காப்பியச்செம்மல்
புலவர் ஆ.காளியப்பன் க.மு.,கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் பேரவை ,
முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),
கோயமுத்தூர் 641101
அலைபேசி 9788552993 / 8610684232
மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com,
pulavarkaliappan.blogspot.in,
www.tholkappiyam.org