கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

தொல்காப்பிய மொட்டுகள்

மொட்டு 4. தொல்காப்பியம் - பண்பு மிகு சொற்கள்

ஆக்கம்: புலவர் ஆ.காளியப்பன்
நாள்: 17-07-2019
*-*-*

கல்வி கேள்விகளில் உயர்ந்த சான்றோர் ஆயினும் ஏதும் அறியாப் பேதை ஆயினும் எவர் இடத்தில் எப்படிப் பேச வேண்டும் எனும் பண்பாடு அறிந்தவர் தமிழர். இப்பண்பாட்டுக் கூறுகளைப் பகர்வதே தொல்காப்பியம்.

ஒரு பொருளை வைத்து உள்ளான் ஒருவனிடம் இல்லான் அதைப் பெற விரும்பினால் எவ்வாறு எந்தச் சொல்லால் கேட்டல் வேண்டும் என்று விளக்குகிறார் தொல்காப்பியர்.

ஈ தா கொடு எனக்கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே
(தொல்: பொருள். எச்சவியல் நூற்பா 444)

இவற்றுள் ‘ஈ’ - சிறிய உயிரி. ‘தா’ - வலிமை. 'கொடு’ - வளைவு என்னும் பொருள்களைத் தருகின்றன. அது மட்டுமின்றி இம்மூன்று சொற்களும் ஒருவனிடமிருந்து ஒரு பொருளைப் பெறுவதற்குப் பயன்படுத்தும் சொற்களாகவும் உள்ளன.

என்பது,தாழ்ந்த நிலையில் உள்ளவன், தன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன் படுத்தும் சொல்லாகும். அதனால்தான் வள்ளுவரும் வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றார். ஈயென இரத்தல் இழிந்தது என்றனர். ஈ என்னும் சொல்லைச் சொல்லாமல் ஈ எனப் பல்லைக் காட்டினாலே போதும். கெஞ்சிக் கேட்டலைக் குறிக்கும்.
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே (தொல்: பொருள். எச்சவியல். நூற்பா 445)
(எ-டு) தாயே எனக்கு சோறு ஈவாயாக.

தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப் பயன் படுத்தும் சொல்லாகும். ஒத்த (அறிவால், செல்வத்தால், வயதால்) என்னும் போது நண்பனை எடுத்துக்கொள்ளலாம்
தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே (தொல்: பொருள். எச்சவியல். நூற்பா 446)
(எ-டு) நண்பா உன் புத்தகத்தைத் தா.

கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும் தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே (தொல்: பொருள். எச்சவியல். நூற்பா 447)
(எ-டு) மகனே, எனக்குத் தண்ணீர் கொடு படர்க்கை இடத்தில் கொடு என்னும் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
(எ- டு)அவனுக்குக் கொடு. மேலும் தன்னைப் பிறன் போல் பாவித்துக் கூறும் போதும் கொடு என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
(எ-டு) அம்மாவுக்கு ஒருமுத்தம் கொடு
கொடு என்கிளவி படர்க்கை ஆயினும்
தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பில்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்
(தொல்: பொருள். எச்சவியல். நூற்பா 448)

இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது தமிழர் மரபு. தொல்காப்பியர் கூற்றை நன்னூலும் வழிமொழிகிறது. ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை (நன்னூல் - 407 )

இடு என்ற சொல்லும் உள்ளது. வன்முறையால் தரச்சொல்வது. கொடுங்கோலன், உள்ளன எல்லாவற்றையும் இடு என்பது.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
(குறள் 552)

ஆகவே ஒரே பொருள்தரும் பலசொற்கள் இருந்தாலும் அவற்றிற்கு இடையே நுட்பமான வேறுபாடுகள் இருக்கும் என்பதை உணர்த்தும் தொன்மை காக்கும் தொல்காப்பியத்தைப் போற்றுவோம். மடிமை: சோம்பேறித்தனம்.

 
	புலவர் ஆ.காளியப்பன்
	தலைவர் தொல்காப்பியர் பேரவை
	முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),
	கோயமுத்தூர் 641101 
	அலைபேசி 9788552993 / 8610684232
	மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com 
	pulavarkaliappan.blogspot.in
	http://www.tholkappiyam.org